அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

20 April, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 6




அன்பு நண்பர்களுக்கு....


சொந்தப் பணிகளோடு, இப்போ எழுதலாம் பெறகு எழுதலாம்னு கொஞ்சம் சோம்பலாவும் இருந்துட்டேன்....
சாரிப்பா...
மீண்டும் மருத்துவம் பகுதிய தொடரப் போறேன் பழையபடி உங்க கருத்துக்களையும் ஆதரவையும் குடுங்க.



மூலிகை மருத்துவம்


16. ஆடுதின்னாப் பாளை
(தாவரவியல் பெயர் : Aristolochia bracteolata)
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.
வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறுகால வலியை அதிகமாக்கும் மருந்தாகவும் பயன்படும்.
1 1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.
2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக்கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.
3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியம் இருக்க (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல், 24 மணிநேரம் தூங்க விடக்கூடாது) மூன்று நாட்களில் எல்லாவிதப் பாம்பு நஞ்சும் தீரும்.
4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பேறு ஆகும்.
5. 5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.
டு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.


17. ஆமணக்கு
(தாவரவியல் பெயர் : Ricinus communis)
கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை முத்து எனப்படும். இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) மலமிளக்கும். தாது வெப்பகற்றும்.
1. இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.
3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
4. ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் அளவு காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.
5. 30 மி.லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.
6. கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.
7. தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப் போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும், மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.
8. வேரை அரைத்துப் பற்றுப் போட பல்வலி நீங்கும்.

18. ஆல்
(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)
சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் நல் வின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்.

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.
விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.
1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.
2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.
3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.
5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.

19. ஆவாரை
(தாவரவியல் பெயர் : Cassia auriculata)
பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையது.
சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல்படும்.
1. பூச்சூரணத்தையோ, பூவையோக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.
2. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை,மாலை குடித்துவர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.
3. ஆவாரம்பூ 100 கிராம் எடுத்து 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளராகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, பெரும்பாடு, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும்.
4. ஆவாரம்பூவைவதக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து யோனியினைக் கழுவ கருப்பை புண், எரிச்சல் தீரும்.
5. ஆவாரம்பூ வேர்ப்பட்டை, சீந்தில் வேர், கொன்றைப் பூ சம அளவில் எடுத்து நீரிலிட்டு எட்டில் ஒன்றாய்க் காய்ச்சிக் குடிக்க நீரிழிவு தீரும்.
6. ஆவாரம்பூவை நன்றாக அரைத்து அதன் சாற்றை கண்ணில் விட சீழ் பிடிக்கும் கண்நோய் தீரும்.
7. ஆவாரம்பூ, இலை சமஅளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து விளக்கெண்ணெயில் வதக்கி சூட்டுடன் வீக்கம், கட்டி இவற்றில் வைத்துக் கட்ட கட்டி கரையும்.

20. ஆனை நெருஞ்சில்
(தாவரவியல் பெயர் : Pedalium murex)
நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்

கூனுறு மெய் வாதமும் போக்கும்.

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப்பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், வெப்பு தணித்தல், குளிர்ச்சி தரல், உடல் உரமாக்கல், காமம் பெருக்கல், மாதவிலக்கு சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிளிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை நாள்தோறும் காலையில் பருகிவர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப் பொடியை பாலில் சர்க்கரை சேர்த்துப் பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாக அரைத்துத் தயிருடன் நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலையாகச் சாப்பிட நீர்சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி ஆண் மலடு நீங்கும்.

5. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

தொடரும்.....
_ பூஞ்சோலை ...
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
                                               -குறள்



1 comment:

Unknown said...

மீண்டும் மருத்துவ குரிப்பு தந்தமைக்கு நன்றி

Post a Comment