அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! நன்றி! ...

14 June, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 8









மிளகு
(தாவரவியல் பெயர் : Piper nigrum)

சீத சுரம் பாண்டு சிலேத்துமம் கிராணி குன்மம்
வாதம் அருசி பித்தம் மாமூலம் _ ஓதுசந்நி
யாசம் அபஸ்மாரம் அடன் மேகம் காசம் இவை
நாசம் கரி மிளகினால்.

கூர்முனையுடைய அகன்ற அழுத்தமான இலையினையும் உருண்டை வடிவப் பழக் கொத்தினையும் உடைய ஏறு கொடி. பழம், கொடி ஆகியவை மருத்துவப் பயனுடையது.

மிளகு, வால்மிளகு, வெள்ளை மிளகு என மூன்று வகைப்படும்.

1. 3 கிராம் மிளகைப் பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வரக் காய்ச்சல், செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். மருந்து வீரியம் தணியும். ( மருந்து வீறு என்பது கடும் மருந்துகளை உட்கொள்வதால் வாய், வயிறு வெந்துபோகுதல்)

2. அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

3. மிளகு 4 கிராம், பெருங்காயம் 1 கிராம், கழற்சிப்பருப்பு 10 கிராம் இவற்றைப் பொடித்துத் தேனில் அரைத்து 200 மி.கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கி வயதுக்கு ஏற்ப 1 அல்லது 2 மாத்திரை காலை, மாலை சாப்பிட்டு வர காய்ச்சல், குளிர் காய்ச்சல், யானைக்கால் காய்ச்சல் ஆகியவை தீரும்.

4. மிளகைப் புளித்த மோரில் ஊற வைத்து உலர்த்தி இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து அரை கிராம் பொடியை தேனில் குழைத்து காலை, மாலை கொடுத்துவர வாயு, கபம், இருமல், செரியாமை, மிகு ஏப்பம் ஆகியவை நீங்கி பசி தீரும்.

5. மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், அருகம்புல் சமூலம் 100 கிராம் ( சமூலம் = மூலிகையின் அனைத்துப் பகுதியும் பூ, காய், இலை,தண்டு, வேர்) அனைத்தையும் இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து 45,90, 150 நாட்கள் தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர கண் நோய் தீரும்.

6. மிளகு 5 கிராம், அருகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 5 கிராம், சீரகம் 5 கிராம் அனைத்தையும் ஒரு லிட்டர் நீரிலிட்டுக் காய்ச்சி கால் லிட்டராக சுருக்கி பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும்.

7. மிளகு 10 கிராம், அவுரி வேர் 20 கிராம், சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை கொடுக்க எட்டி, வாமை, கலப்பைக் கிழங்கு நாவி, அலரி வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும்.

8. 6 மிளகுடன் 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருகம்பூ இவற்றை இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை குடித்துவர ஆஸ்துமா, இரைப்பு, நுரையீரல் சளி, மூக்கடைப்பு, இருமல் ஆகியவை தீரும்.

9. மிளகு 6, சுக்கு 10 கிராம், சீரகம் 35 கிராம், பூண்டு பல் 3, ஓமம் 10, இந்துப்பு 4 கிராம் இவற்றை மண்சட்டியில் வறுத்து 50 கிராம் வேப்பங் கொழுந்துடன் மையாய் அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளுக்கு அரைச்சங்கு தாய்ப்பாலில் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

10. மிளகுடன் ஒரு கைப்பிடி இலந்தை இலை, பூண்டு 4 பல் அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கும்.

11. 2 கிராம் மிளகுடன் 10 கிராம் கரிசாலை இலையை சேர்த்து வெண்ணெய் போல அரைத்து மோரில் கலக்கி காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, சோகை முதலியவை தீரும்.

12. 10 கிராம் மிளகுடன் சமஅளவு சுக்கு, திப்பிலி, இரண்டு கிராம் இலவங்கம் சேர்த்து அத்துடன் ஆடாதொடை வேர் 80 கிராம், முசுமுசுக்கை வேர் 120 கிராம் சேர்த்து பொடியாக்கி 5 அரிசி எடை கருப்பு வெற்றிலையுடன் சாப்பிட்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பு துப்புரவாகும். உறைந்த சளி வெளியேறும். இருமல், என்புருக்கி தீரும்.

13. மிளகு 10 மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி இவைகளை ஒன்றாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேளை குடித்து வர காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு தீரும்.

14. மிளகையும், துளசியையும் தனித்தனியாக வறுத்துப் பொடி செய்து வெல்லப் பாகில் பொடியைச் சேர்த்து சுண்டைக்காய் அளவு உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்துக்கொண்டு வாயில் போட்டு நன்றாக சப்பி சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட தீராத விக்கல் நிற்கும். உப்பு, புளி, காரம் நீக்க வேண்டும்.

15. மிளகுத் தூளுடன் திப்பிலித் தூள் சிறிது சேர்த்து அரிசி வேகவைத்த நீருடன் கலந்து கொடுக்க கல்லீரல், மண்ணீரல், நல்ல முறையில் இயங்கும். இரத்தம் அதிகரிக்கும். பசி உண்டாக்கும்.

16. மிளகு மற்றும் ஏலக்காய் விதைகளை பொடி செய்து கொடுக்க கருத்தரித்த தாய்மார்களுக்கு சளி சம்மந்தமான வியாதி குணமாகும்.

17. மிளகு, கசகசா, பாதாம்பருப்பு, கொப்பரைத் தேங்காய், சீரகம் இவரை பசும்பாலில் அரைத்துக் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தலைக்குத் தேய்த்து முழுகி வர யாதொரு நோயும் அணுகாது.

18. திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) பொடி செய்து சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். சீரகம், ஏலமும் சேர்த்துக் கொள்ளலாம்.

19. திரிகடுகுப் பொடியை திரிகடி அளவு (மூன்று விரல் அளவு) சூடான வெந்நீருடன் சாப்பிட்டால் சில நிமிடங்களில் தலைவலி நீங்கும்.

20. ஒன்பது மிளகை அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மை போல அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே குணமாகும்.

21. மிளகு, சந்தனம், கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்குகளின் மேல் பூச குணமாகும்.

22. மிளகுத்தூள் 1 மி.கிராம், சிறிய வெங்காயம் இரண்டு, அரை கிராம் உப்பு இம்மூன்றையும் நன்றாக அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வர புழு வெட்டு நிற்கும்.

23. 10 மிளகுடன் 3 ஆடாதொடை இலையை சேர்த்து மை போல அரைத்து உருட்டி நாள்தோறும் காலையில் விழுங்க வேண்டும். இவ்வாறு நாற்பத்தைந்து
நாட்கள் சாப்பிட நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.

24. புரசு விதை, மிளகு வகைக்கு 3 கிராம், வெள்ளைப் பூண்டு 6 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு மூன்று நாள் காலை சூரிய உதயத்தில் சாப்பிட விரை வீக்கம் நீங்கும்.

25. மிளகு, உப்பு, இலவங்கம், கற்பூரம் இந்நான்கையும் இடித்துப் பொடி செய்து வஸ்திர காயம் செய்து வைத்துக் கொண்டு பல் துலக்கி வெந்நீரில் வாய் கொப்பளிக்க பல் நோய் தீரும்.

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும்
பயமில்லாமல் சாப்பிடலாம்.
                                                                    தொடரும்
- பூஞ்சோலை.





















03 June, 2011

மலர்ந்தேன் நான்............(ஜுன் இரண்டாம் நாள்)


இறை அருளால்
உருவாக்கப்பட்ட
மானிட பிறவிகளில்
நானும் இவ்வுலகை
கண்ட நாள்.........
நானறியா மொழிகளில்
பேசிய நாள்....
நான்கு காலோடு
நடனமாடிய
நல்ல நாள்....
கபடம் அறியா
காடாற்சத்தில்-இளம்
கன்றான நாள்....
காட்சிகள் அறியாது
கலைக் கூடத்தில்-காவியத்தை
கண்ட நாள்.....
சுதந்திர தேவியோடு
சுகமாய்ச்
சுற்றி வந்த நாள்........
இனி காணாத அந்த
இனிய நாள் -இன்று
என் நினைவுகளில்......


உங்கள் நண்பன்
பாலா.........

இறை படைப்பில்
இவனும் ஓர் துளி
கவிதையாய்..........

குமாரசுவாமி பாலசுப்ரமணியன்

28 May, 2011

காதல்


உணர்வை உருக்கி
மூளையை கசக்கி
இரத்தத்தின் வாயிலாக
உயிரை கரைத்து
மனித நெஞ்சுக்குள்
மூன்றெழுத்தாய் படைத்துவிட்டான்
இறைவன்........................................
"காதல்"

உங்கள் நண்பன்
பாலா

நீ இல்லாத உலகம்



நித்தம் ஒரு யுகம்
சத்தமில்லாத பகல்
சந்தமில்லாத பாடல்
சொந்தமில்லா வாழ்க்கை
சொர்க்கமில்லா பூமி
சுவாசமில்லா உயிர்
ரசிக்காத மனம்
ருசிக்காத உணவு
சிறகில்லா பறவை
அர்த்தமில்லா கவிதை
அழகில்லாத முகங்கள்
அருவருப்பாய் சுரங்கள்
ஆறுதலாய் நட்பு-இங்கு
புரியாமல் நான்...............
அறியாமல் நீ-ஆனால்
இரவில் மறவாமல்-திறந்தது
சொர்க்கத்தின் கதவுகள்
உன் வரவால்..........
நினைவுகளுடன்.... உங்கள் நண்பன்
                                                   பாலா

10 May, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 7












மூலிகைகளைப் பத்தி படிச்சி கொஞ்சம் போரடிச்சிருக்கும். அதனால தினமும் நாம சமையல்ல பயன் படுத்தற கடுகு, சீரகம், பட்ட சோம்பு, இஞ்சி, பூண்டு போன்ற மசாலா அயிட்டங்களோட மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.



கடுகு
(தாவரவியல் பெயர் :Brassica juncea)

இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்


கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்

படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்

கடுகோட்டு மேன்மருந்த காண்.

மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு

முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்

மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்

தானே கடுகிற்குத் தான்.

கடுகுன்னு சொன்னதுமே மொதல்ல நமக்கு நெனப்பு வர்றது தாளிப்பு தான். ஒரு சமையல் முழுமையடையறது தாளிப்புலதான் இருக்கு. இந்த கடுகுல ரெண்டு வகை இருக்கு. கருங்கடுகு இத செங்கடுகுன்னும் சொல்லுவாங்க. இன்னொண்ணு வெண்கடுகு. இது நாட்டு மருந்துக் கடைல கிடைக்கும்.
வாந்தி உண்டாக்கறது, வெப்பத்த அதிகப்படுத்தறது, சிறுநீர் பெருக்குதல், நாம சாப்பிடற உணவுப்பொருட்கள வேகமா செரிக்க வைக்கறது போன்ற மருத்துவ குணங்கள் கடுகுக்கு இருக்கு.
1. பூச்சிமருந்து குடிச்சவுங்க, தூக்க மாத்திரை சாப்பிட்டவுங்களுக்கு 2 கிராம் கடுகை நைசா அரைச்சு தண்ணில கலக்கி குடிக்க கொடுத்தா உடனடியா வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
2. கடுகோட சமஅளவு முருங்கப்பட்டை சேர்த்து அரைச்சு பத்துப்போட கைகால் குடைச்சல், மூட்டு வலி, நரம்புப் பிடிப்பு இதெல்லாம் தீரும். எரிச்சல் இருந்தா உடனே கழுவிரணும்.
3. 10 கிராம் கடுகைப் பவுடராக்கி கால் லிட்டர் தண்ணில ஊறவச்சு வடிகட்டிக் குடிச்சா விக்கல் உடனே நிக்கும்.
4. கடுகு எண்ணெயோட 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து கொஞ்சம் கற்பூரம் சேர்த்து மூட்டு வலி, மார்புவலிக்குத் தேய்க்க வலி குறையும்.
5. கடுகைப் பொடிச்சு அரிசி மாவுல கலந்து பிசைஞ்சு களிபோல வேகவச்சு துணில தடவி வலியுள்ள இடங்கள்ல போட வயித்துவலி, வாதவலி, கெண்ட வலி எல்லா வலியும் தீரும்.

சீரகம்
(தாவரவியல் பெயர் : Cuminum cyminum)
எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ன
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே
இதுவும் நாம தினமும் சமையலுக்குப் பயன்படுத்தற ஒரு கடைச்சரக்குதான். சீரகம் நம்ம வயித்துல இருக்குற வாயுவ நீக்கி, செரிமானத்த அதிகப்படுத்தி, சிறுநீர்பெருக்கி, திசுக்களை இருகச் செய்யறது, மாதவிடையத் தூண்டுறது போன்ற மருத்துவக் குணங்களை உடையது.
1. சீரகத்த நல்லா காயவச்சு பவுடராக்கி 1 கிராம் அளவு எடுத்துத் தேன் அல்லது பாலில் காலை, மாலை சாப்பிட பித்தம், வாயு, உதிரச்சிக்கல், சீதக்கழிச்சல், ஆகியவை தீரும்.
2. சீரகத்த சுத்தம் செஞ்சு 50 கிராம் எடுத்து காயவச்சுப் பொடி செஞ்சு நாட்டுச் சக்கர கலந்து, விடாம தொடர்ந்து நாள்தோறும் சாப்பிட தேகம் வன்மை பெறும்.
3. பொடித்த சீரகம் ஒரு ஸ்பூன் கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டா இருமல் தீரும்.
4. சீரகத்த கரிசாலைச் சாறில் ஊறப் போட்டு உலர்த்தின பொடி 5 கிராம், சர்க்கரை 10 கிராம், சுக்குப்பொடி 5 கிராம் இந்த மூன்று பொடிகளையும் கலந்து தினமிருவேளை உட்கொள்ள காமாலை, வாயு, உட்சுரம் தீரும்.
5. தேவையான அளவு சுத்தம் செஞ்ச சீரகத்த எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, நெல்லிச்சாறு ஆகியவை ஒவ்வொன்னுலையும் மும்மூணு முறை ஊறவச்சு உலர்த்திப் பொடி செஞ்சு அரைத்தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, உடல் வெப்பம் ஆகியவை தீரும்.
6. சீரகத்த அரச்சுப் பத்துபோட்டா மார்பக வீக்கம், விரைவீக்கம் ஆகியவை குறையும். எரிச்சல் வலியுள்ள இடங்கள்ல தடவ குணமாகும்.

வெந்தயம்
(தாவரவியல் பெயர் : Trigonella foenum graecum)
பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொல்லை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.
இது கீரை வகையைச் சேர்ந்தது. இலைகளும் விதைகளும் மருத்துவப் பயனுள்ளது. வெந்தயத்த காரக்குழம்பு, ஊறுகாய்க்கு அவசியம் பயன் படுத்துவாங்க. கீரையக் கூட்டா செஞ்சு சாப்பிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சியத் தரும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

சோம்பு
(தாவரவியல் பெயர் : Pimpinella Anisum)
இதனை பெருஞ்சீரகம்னும் சொல்வாங்க. சோம்பு செரிமான சக்திய அதிகப்படுத்தும்.
1. சோம்பை இளவறுப்பா வறுத்து பொடித்து 2 கிராம் எடையளவு சர்க்கரை கலந்து, தினம் இருவேளை சாப்பிட வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், இரைப்பு நோய் ஆகியவை குறையும்.
2. சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.
3. சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.
4. சோம்பு பசியைத் தூண்டும்.
5. சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
-குறள்
தொடரும்
- பூஞ்சோலை

ஜனனம்

ஜனிக்கின்ற உயிக்கெல்லாம்
பலகோடி உறவிங்கே - அதில்
ஆதி முதல் உண்டானது
அன்னை எனும்
உறவென்பேன் .........
வாழ்வின்
ஒவ்வொரு நொடியும்
நான் சுவாசிக்கும்
நேசம் அது...-நான்
மரிக்கின்ற பொழுதும் கூட
மங்காத பாசம் அது......
கருவறையில்
உறைய வைத்தாய் -உன்
உயிரை விதையாக்கி
என் உயிரை
வளரவிட்டாய்.....
தொப்புள் கோடியில்
தோன்ற வைத்து -இம்
மண்ணுலகில் எனை
பிறக்க வைத்தாய்.....
இரத்தத்தை பிரித்தெடுத்து
பாலாக ஊட்டிவிட்டாய் .....
தாய்பாலின் உயிரோட்டத்தில்
நான் தத்தி தத்தி
நடக்கையிலே......
நிலா சோறு ஊட்டி விட்டு
தாலாட்டு நீ பாட....
ஆராரோ வாய் பாட்டில்
அசந்து போய் நானுறங்க....
இதுவரை கிட்டவில்லை
தாயே .................-அதுபோல்
ஓர் தூக்கம் ............
ஊண் உருகி
நின்ற பொழுதும்
பசியென்று
வாடிய பொழுதும்
தூணாகி நின்றவளே
பால் சோறு தந்தவளே.....
தட்டு தடுமாறி
நின்ற பொழுதும் -நான்
தடம் மாறி
சென்ற பொழுதும்...
பதறி துடித்தது
நீயல்லவா -எனை
தாங்கி பிடித்தது
என் தாயல்லவா .....
பாடுகின்ற குயிலின் கீதம்-மனதை
அள்ளுகின்ற அருவியின் நாதம்
ஆடுகின்ற மயிலின் தோகை -நெஞ்சை
வருடுகின்ற காதல் புறாக்கள்
துள்ளுகின்ற மானின் அழகு -வான்
கொட்டுகின்ற மழையின் சாரல் -தினம்
காண்கின்றேன் மாசற்ற
என் தாயுருவில் .....
குருதியை மையாக்கி
உணர்வை பேனாவாக்கி -என்
உள்ளமெனும் ஏடுகளில்
உள்ளதை நான் எழுத
நினைக்கையில் .........
என்ன வென்று சொல்லிடுவேன்
என் தாயவளை
வாழ்த்த இங்கு
வார்த்தைகளே இல்லை....
எங்கு தேடித் பார்த்தாலும்
சிந்தனைகள் செலவிட்டாலும்
இவ்வையகத்தில் நான் பயின்ற
அத்தனையும் நீ தந்ததே .....
என் செய்வேன்
என் அருமை தாயே....
என்ன நான்
தந்திடுவேன் உனக்கீடாக...
என் உடலின்
சதை கோளங்களை
கேட்கிறேன் ....
எள்ளி நகையாடுகிறது ....
என் உடலுக்கு
அரணாக நிற்கும்
எலும்பு கூடுகளை
கேட்கிறேன்.............
ஏளனப்பார்வை பார்க்கிறது....
உள்ளுக்குள் இரத்தத்தை
உறிஞ்சி எடுக்கும் -என்
இதயமதை கேட்கிறேன்
இறுமாப்புடன் சிரிக்கிறது...
இவ்வுலகெங்கும்
நிறம் பார்க்கும் -என்
கருவிழிகளை கேட்கிறேன்
அத்தனையும் எனை பார்த்து
ஒன்றாக கூறிய பதில் ....
நான் உனதல்ல வென்று -ஆம்
அவை அத்தனையும்
நீ தந்தது......
நான் பேசும் முதல்
மொழியும் நீ தந்தது -உனக்கு
ஈடாய் வேறேதென்பது.....
மனம் ஒடிந்து விழுந்தாலும்
போதிக்க புத்தனே ஆனாலும் -நான்
சாதிக்க என் தாய் மடி போதுமென்பேன் !!
ஆயிரம் உறவுகள்
ஆண்டு தோறும் வந்ததாலும்-அந்த
ஆண்டவனே வந்துநின்று
உறவென்றே சொன்னாலும் -என்
அன்னையவள் உறவுக்கு
ஈடில்லை என்றிடுவேன் ............
படைப்புக்கு பிரம்மனில்லை -இம்மண்ணுலகில்
தாயென்றே சொல்லிடுவேன் .....
தவமிருந்து கேட்கிறேன்
தாயே வரங்கள் நீயும்
தந்திட வேண்டும்..............
கொச்சு பிள்ளையாய்
உன்னில் நான்
பிறந்திட வேண்டும் .....
கொஞ்சும் மொழிகள்
உன்னுடன் நான்
பேசிடல் வேண்டும்....
சின்ன சின்ன தவறுகள்
நான் செய்திடல் வேண்டும் ....
அதற்கு நீயும்
செல்லமாய் கடிந்திடல்
வேண்டும் ......
அமுதெனும் தாய்பாலை -நீ
அள்ளி அள்ளி
வழங்கிட வேண்டும் .....
அன்பெனும் கடலில்
நான் தினம் தினம்
நீந்திடல் வேண்டும் .....
சாகும் வரை
குழந்தையாய் உன் மடியில்
நான் உறங்கிட வேண்டும்...
ஆயிரம் ஆயிரம்
ஜென்மங்கள் எடுத்தாலும் -தாயே
நீயே என் தாயாய்
வந்திடல் வேண்டும்...............

உங்கள் நண்பன்
பாலா



08 May, 2011

மரணம்


உயிர் எனும் காதலியை
போராடி வெல்கின்ற
தோல்வியில்லா
காதலன்..............



உங்கள் நண்பன்
பாலா

02 May, 2011

மழைக் காலம்....



மழைச் சாரலே
பனித்தூறலே.....
மண் மீது-ஏனடா
விழுகின்றாய்......
மண் காதலி
உனை கவர்ந்ததால்
கவி பாடி
நீயும் தொடுகின்றாய்....
வெள்ளைச் சிறகுகள்
நீ விரித்து.....
பறந்து வருவதய்
கண்டதாலோ...........
நீ பட்டதும்
விரல் தொட்டதும்
சிலிர்த்து சுகம்
பெற்றதும்....
புத்தம் புது
வாசம் வீசுகிறாள்....
உந்தன் ஊடலில்
பிறந்ததோ.....
உயிரினங்கள்....
உன் பாடலில்
மலர்ந்ததோ....
மலர்ச்செடிகள்...
நீ தொட்டதும்
வருவதோ
புல்வெளிகள்.....
இயற்கை அத்தனையும்- உந்தன்
மறுபிறப்போ...........
மனிதனையும்-உனக்காய்
அழ வைப்பது தான்
உந்தன் சிறப்போ.......?

உங்கள் நண்பன்
பாலா

27 April, 2011

இயற்கை அன்னை



காலைச் சூரியன்
உதிக்கும் நேரம்....
காக்கை கூட
கரைந்து பாடும்....
முரட்டுச் சேவல்
அவன் வரவை எண்ணி
கொக்கரித்தே
சேதிகள் கூறும்...
அழகுப் பூக்கள்
அவனைக் கண்டு-இதமாய்
புன்னகைத்தே
காதல் கூறும்....
நிலவுப் பெண்ணும்
வெட்கம் கொண்டு
வானில் எங்கோ
மறைந்து போகும்....
இத்தனை அழகையும்
ஒன்றாய் கண்டால்
கவிதை நெஞ்சில்
தானாய் ஊறும்.........


இணையத்தில் என் கவிதை இதழ் பதித்த முதல் முத்ததுடன்...........

உங்கள் நண்பன்
பாலா

20 April, 2011

தமிழ் மருத்துவம் (சித்தா) - 6




அன்பு நண்பர்களுக்கு....


சொந்தப் பணிகளோடு, இப்போ எழுதலாம் பெறகு எழுதலாம்னு கொஞ்சம் சோம்பலாவும் இருந்துட்டேன்....
சாரிப்பா...
மீண்டும் மருத்துவம் பகுதிய தொடரப் போறேன் பழையபடி உங்க கருத்துக்களையும் ஆதரவையும் குடுங்க.



மூலிகை மருத்துவம்


16. ஆடுதின்னாப் பாளை
(தாவரவியல் பெயர் : Aristolochia bracteolata)
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி

நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்

எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்

திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு
மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.
வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறுகால வலியை அதிகமாக்கும் மருந்தாகவும் பயன்படும்.
1 1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.
2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக்கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.
3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியம் இருக்க (புதுப் பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல், 24 மணிநேரம் தூங்க விடக்கூடாது) மூன்று நாட்களில் எல்லாவிதப் பாம்பு நஞ்சும் தீரும்.
4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை நீங்கி சுகப்பேறு ஆகும்.
5. 5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.
டு தின்னாப் பாளையின் வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் கண்டுபிடித்து விடலாம்.

இனிப்பு -நல்ல பாம்பு, இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு, தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு, உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு, மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு, கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு, காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு, புளிப்பு -வழலைப் பாம்பு, புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு, முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு, நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு, நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு, கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு, பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.


17. ஆமணக்கு
(தாவரவியல் பெயர் : Ricinus communis)
கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண்பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டை முத்து எனப்படும். இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் (விளக்கெண்ணெய்) மலமிளக்கும். தாது வெப்பகற்றும்.
1. இலையை நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டிவர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.
3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
4. ஆமணக்கு இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் அளவு காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.
5. 30 மி.லி விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.
6. கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஓரிரு துளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.
7. தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப் போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும், மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.
8. வேரை அரைத்துப் பற்றுப் போட பல்வலி நீங்கும்.

18. ஆல்
(தாவரவியல் பெயர் : Ficus benghalensis)
சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை

கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண் நல் வின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்.

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையது.
விழுது, பட்டை, இலை ஆகியவை, உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.
1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் இடித்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலை தினமும் குடிக்க மேக எரிச்சல், மேகப்புண், வெள்ளை படுதல் தீரும்.
2. ஆலம் பாலை வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் இவைகளுக்குத் தடவ குணமாகும்.
3. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்தணுக்கள் உற்பத்தியாகும்.
4. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து சாப்பிட இரத்த பேதி நிற்கும்.
5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி காலையில் மட்டும், ஒரு குவளை 4 நாட்களுக்கு ஒரு முறை 4 மண்டலம் வரை சாப்பிட (ஒரு மண்டலம் 48 நாட்கள்) மதுமேகம் (சர்க்கரை நோய்) தீரும்.

19. ஆவாரை
(தாவரவியல் பெயர் : Cassia auriculata)
பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையது.
சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல்படும்.
1. பூச்சூரணத்தையோ, பூவையோக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும பயன்படுத்த மேகவெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.
2. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை,மாலை குடித்துவர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.
3. ஆவாரம்பூ 100 கிராம் எடுத்து 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளராகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, பெரும்பாடு, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும்.
4. ஆவாரம்பூவைவதக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து யோனியினைக் கழுவ கருப்பை புண், எரிச்சல் தீரும்.
5. ஆவாரம்பூ வேர்ப்பட்டை, சீந்தில் வேர், கொன்றைப் பூ சம அளவில் எடுத்து நீரிலிட்டு எட்டில் ஒன்றாய்க் காய்ச்சிக் குடிக்க நீரிழிவு தீரும்.
6. ஆவாரம்பூவை நன்றாக அரைத்து அதன் சாற்றை கண்ணில் விட சீழ் பிடிக்கும் கண்நோய் தீரும்.
7. ஆவாரம்பூ, இலை சமஅளவு எடுத்து நன்றாக சுத்தம் செய்து விளக்கெண்ணெயில் வதக்கி சூட்டுடன் வீக்கம், கட்டி இவற்றில் வைத்துக் கட்ட கட்டி கரையும்.

20. ஆனை நெருஞ்சில்
(தாவரவியல் பெயர் : Pedalium murex)
நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்

கூனுறு மெய் வாதமும் போக்கும்.

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப்பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல், வெப்பு தணித்தல், குளிர்ச்சி தரல், உடல் உரமாக்கல், காமம் பெருக்கல், மாதவிலக்கு சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிளிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனை நாள்தோறும் காலையில் பருகிவர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

2. 10 கிராம் இலைப் பொடியை பாலில் சர்க்கரை சேர்த்துப் பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

3. 50 கிராம் இலையை மென்மையாக அரைத்துத் தயிருடன் நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.

4. 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலையாகச் சாப்பிட நீர்சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி ஆண் மலடு நீங்கும்.

5. இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

தொடரும்.....
_ பூஞ்சோலை ...
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
                                               -குறள்